மன்னார் ஆயருடன் ஒருமைப்பாடு, அவருக்கு ஆதரவு, அவருக்காக இறைவேண்டல்
மன்னார் ஆயருடன் ஒருமைப்பாடு, அவருக்கு ஆதரவு, அவருக்காக இறைவேண்டல்
27 மே 2012
மன்னார் கத்தோலிக்க ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாக 27 மே 2012, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை தூய செபஸ்தியார் ஆலய வளாகத்தில் இடம்பெறும் பொது ஒன்றிப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளும் நாம் அனைவரும்:
- பல ஆண்டுகளாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட, “குரலற்றோரின் குரலாக”, சிறப்பாக தமிழ் மக்களின் அரசியல் ஏக்கங்களுக்கும் உண்மைக்கும், தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற கடந்த கால, நிகழ்கால ஒடுக்குமுறைகளுக்கு நியாயம் கேட்கும் தனது பணியை ஆற்றிவரும் மன்னார் ஆயர் அவர்களுக்கு எமது மனமார்ந்த, நன்றி கலந்த பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம்.
- அண்மைக் காலமாகத் வெளிப்படும் அக்கறையுள்ள அச்சங்களுக்கிடையில் ஆயர் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கத்தைக் கேட்டு நிற்கின்றோம்.
- ஆயர் அவர்களுக்கு எதிராக தனிநபர்களாலும், குழுக்களினாலும், அரச அமைச்சர்களினாலும், அரச, அரச சார்புடைய ஊடகங்களூடாகவும் சுமத்தப்படும் தவறானதும், வெறுப்பினால் உந்தப்பட்டதுமான குற்றச் சாட்டுக்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
- இன்றைய நிகழ்வின் அமைப்பாளர்களையும், பங்காளர்களையும் அச்சுறுத்தி அடக்க முயலுவதையும், காவல்துறையினர் நீதிமன்ற அமைப்புக்கள் மூலம் எமது நியாயமானதும் அமைதியானதுமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயல்வதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
- இன்று ஆயர் அவர்களுக்கும் எமக்கும் ஆதரவளிக்கவும் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், இறைவேண்டுதல் செய்யவும், எதிர்ப்புக்களைத் துச்சமென மதித்து, பெருமளவில் கூடிவந்திருக்கும் உங்களனைவருக்கும், சிறப்பாக கத்தோலிக்கர் அல்லாதோர், பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்தோர், எமது சிங்கள சகோதரர்கள் அனைவருக்கும் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
மன்னார் ஆயரும், எமது மாபெரும் ஆன்மீகத் தலைவருமாகிய மேதகு இராயப்பு யோசேப்பு அவர்களுக்கு இறைவன் நல்ல உடல் நலத்தையும், துணிவையும், ஆற்றலையும் கொடுத்தருள தொடர்ந்து வேண்டுதல் புரிவோம்.
மேற்படி ஆதரவு நிகழ்வில் பங்கு கொண்ட அனைவராலும் வழிமொழியப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது.
(இக்குழுவுடன் அருள்பணி. ஜெயபாலன் குரூஸ் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம்.
Email: jeyabalancroos@gmail.com
Tel.: +94 23 323 2655, +94 77 787 4071)
பின்புலத் தகவல்
2012 ம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்தே மன்னார் ஆயருக்கு எதிரான பல கருத்துக்கள் அரசாங்க அமைச்சர்களினாலும், அரசாங்க, அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும், அரச சார்புள்ள ஊடகங்கள் மூலமாகவும் தொடுக்கப்பட்டுள்ளன. மன்னார் ஆயர் தமிழ் ஈழத்தின் “கருதினால்” (Cardinal)ஆக வர முயற்சிகள் செய்கிறார், அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆட்சிக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளார், தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையைச் சிதைக்கின்றார் என்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்கள் அவர்மேல் சுமத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்துக்கு அவர் எழுதிய கடிதத்தையடுத்து (இக்கடிதத்தில் இவருடன் சேர்ந்து வடக்கைச் சேர்ந்த 30 கத்தோலிக்க அருள் பணியாளர்கள் கையொப்பம் இட்டிருக்கிறார்கள். இது பின்னர் ஒரு ஓய்வுபெற்ற சிங்கள அங்கிலிக்கன் ஆயர் உட்பட 63 சிங்கள தமிழ் சமூகங்களைச் சேர்ந்த, கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அருள் பணியாளர்களாலும் ஆண், பெண் அடங்கிய பொது நிலையினராலும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்துக்கு அனுப்பப்பட்டது). மன்னார் ஆயர் அவர்கள் சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு (கற்றுக்கொண்ட பாடங்களுக்கும், நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு – LLRC) விரிவான ரீதியில் முறையீடு அளித்து 16 மாதங்களின் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) அண்மையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஆயர் அவர்கள் தமிழ் மக்களுடைய முக்கிய நிலைப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூர்மையுடன் கலந்துரையாடிய தமிழ் ஆர்வலர்கள் குழுவிலும் இடம்பெற்றிருந்தார்.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தின் உறுப்பு நாடுகள் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக் கூறும் கடப்பாடு ரீதியாக ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முயன்றபோது ஆயர் வெளிப்படையான ஆதரவை அந்த மன்றத்துக்குத் தெரிவித்த படியினால் ஆயருக்கெதிரான அண்மைக்கால எதிர்ப்பு அலைகள் தீவிரமாகின. LLRC பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த எழுந்த கோரிக்கைகளுக்கும், அதற்கான செயற் திட்ட வரைவுக்கும், LLRC யில் உள்ளடக்கப்படாத விடயங்களை, உதாரணமாக போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் கடப்பாடு (accountability) போன்றவற்றுக்கு அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்றின் மூலம் கையாளவேண்டும் என்ற குரல்களுக்கு ஆயர் தமது ஆதரவைத் தெரிவித்தார்.
மேற்கூறப்பட்டதும், வேறு பல பொதுவான, தனிப்பட்ட இடையீடுகள் மூலமும் ஆயர் அவர்கள் தமிழ் தேசியத்தை அங்கீகரிக்கவும், இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணப்படவும், போரின் இறுதிக் கட்டத்தில் இடம் பெற்ற கொடுமைகள், மேலும் இனமுறுகல் காலம் முழுவதிலும் நடைபெற்ற கொடுமைகள் பற்றிய உண்மை நிலையை எடுத்துரைக்கவும் கோரியுள்ளார். வலுக்கட்டாயத்தினாலும் சட்டத்துக்கு முரணாகவும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மக்களிக்கு மீளளிப்பு செய்யவும், வடபகுதியிலிருந்து 1990ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட வடபகுதி முஸ்லிம் மக்கள், தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் ஆதரவுக்கு நிகராக ஆதரவு பெற்று, மீள்குடியேற்றப்படவும், கொல்லப்பட்ட, காணாமல்போன, போரினால் காயமுற்ற மக்களுக்கும், நீண்ட காலம் தடுப்புக்காவலில் வாடுபவர்களுக்கு ஆதரவாகவும் பேசவும், போர் முடிந்த பின்னர் எழுந்த சிக்கல்களான இரணுவ மயமாக்கல், தமிழ் பிரதேசங்களில் கலாச்சார ஆக்கிரமிப்பு, தெற்கில் ஊடகவியலாளர், மனித உரிமை பாதுகாப்பாளர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த சிங்கள மீனவர் ஒருவர் கொல்லப்பட்டமை ஆகியவற்றை கண்டித்தும், உண்மையை வெளிக்கொணர வேண்டுமென உரைத்தார். அவரது LLRC முறையீட்டில் இறுதிப் போரின்போது 146,679 மக்களுக்கு என்ன நடந்தது என்ற வினாவை அவர் முன்வைத்தார். இறுதி 8 மாதங்களில் அரசாங்க கணக்கின்படி வன்னியில் எத்தனை மக்கள் இருந்தார்கள் எத்தனை பேர் வெளியிலே வந்தார்கள் என்ற ஆதாரங்களை விலாவாரியாக மேற்படி ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருந்தார்.
ஆயர் அவர்கள் எந்த வேளையிலும் தனிநாடு கேட்கவோ, ஆயுதப்போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்கவோ கோரிக்கை விடவில்லை. இலங்கையில் நல்லிணக்கம் என்ற பரந்த நோக்கில், தமிழ் மக்களின் மேன்மைக்கும் நீதிக்குமான போராட்டத்தில் அவர் இவையிரண்டையும் சாத்தியமான இலக்காக நோக்கவில்லை.
ஆயர் அவர்கள் தேசிய மட்டத்திலும், உள்ளூர் மட்டத்திலும் அரச அலுவலர்களுடன் ஒத்துழைத்து அவர்களுடன் நல்லுறவைப் பேணியிருக்கிறார். சனாதிபதி, அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அரச அதிபர்கள், படை அதிகாரிகள் ஆகியோர் இதில் அடங்குவர். குற்றப் புலனாய்வுத் துறையினர் (CID) விசாரணை செய்ய வேண்டியபோது, உடனடியாக அவர்களது கோரிக்கைக்கு இணங்கினார். LLRC ஆணைக்குழு மன்னாரில் தனது விசாரணையை நடாத்தவேண்டும் என்று கோரிக்கை விட்டவரும் அவரே. அதே வேளையில் ஆயர் அவர்கள் அனைத்துலக சமூகத்துடன் ஒத்துழைத்து தனது ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள், வல்லுனர்கள், அலுவலர்கள் ஆகியோருடன் சேர்ந்து உழைத்திருக்கிறார். இந்த ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையும் அங்கம் வகிக்கிறது என்பது இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது.
_______________________________________________

